அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோத ஒளி - ஒலிபரப்பு நிலையம் பொலிசாரினால் முற்றுகை
இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளி/ஒலிபரப்பு நிலையமொன்றில் பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.
தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய இந்தச் சோதனையின்போது, மாலைத்தீவு நாட்டவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் கைது
இந்த நிலையம், அத்திடிய பகுதியில் ஒரு பயண நிறுவனத்தின் பெயரில் இயங்கி வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

செயற்கைக்கோள் சமிக்ஞை ரிசீவர்கள், செயற்கைக்கோள் தட்டுகள், கணினிகள், ஒரு ஸ்டார்லிங்க் அலகு மற்றும் பிற ஒலிபரப்பு உபகரணங்கள் உட்பட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சாதனங்கள் சோதனையின்போது பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையம், ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை மறுவிநியோகம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.