பாதுகாப்பு சேவைகள் அரசியல் மயம் : பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு
பொலிஸ் சேவை மற்றும் பாதுகாப்பு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது எனப் பாதாளக் குழுக்கள் கருதுகின்றன என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) குற்றம்சாட்டியுள்ளார்.
கண்டியில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முழுப் பாதுகாப்பு கட்டமைப்பு
மேலும் தெரிவித்ததாவது, "பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
இந்த முரண்பாடுகள் பொலிஸ் ஆணைக்குழு வரை தொடர்கின்றது. இதனால் முழுப் பாதுகாப்பு கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது.
நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என்று ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்கள் கருதுகின்றனர்.
தமக்கு இணக்கமானவரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கும் அளவுக்கு பொலிஸ் சேவை இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
தேசபந்துக்குச் சாதகமான சூழல்
பொலிஸ் சேவை மாத்திரமல்ல, பாதுகாப்பு சேவை உட்பட புலனாய்வுப் பிரிவும் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவைகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
பொலிஸ்மா அதிபரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர். இது உலக நகைச்சுவையாகும்.
தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸார் கைது செய்யமாட்டார்கள். உயர்நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை பெற்றுக்கொள்வதற்கு தேசபந்துக்குச் சாதகமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.
அதுவரையில் அவர் கைது செய்யப்படமாட்டார். மேலும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் சார்பில் பென்சில் சின்னத்தில் போட்டியிடுவோம்" எனறும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
