தனியார் வகுப்பு ஆசிரியை ஏற்பாடு செய்த பொலிஸ் பாதுகாப்பு பேரணி
சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதில், தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியை ஒருவர், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக பொலிஸ் பாதுகாப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
புலனாய்வு மதிப்பாய்வு
பொதுவாக திரைப்படம் எடுப்பது போன்ற குறிப்பிட்ட பொது விடயங்களுக்கு, கோரிக்கை மற்றும் அதன் சூழல், கதை வசனம் உட்பட முழுமையான புலனாய்வு மதிப்பாய்வுக்குப் பின்னரே, இலங்கை பொலிஸ் அதிகாரிகளையும் வாகனங்களையும் வழங்குவது வழக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இசை நிகழ்ச்சிகள் அல்லது அனுமதிச்சீட்டுக்களின் அடிப்படையில் நடைபெறும் விழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்கும் பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படலாம், எனினும் தேவையான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, அந்த விடயங்கள் அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவுக்கு, இந்த அணிவகுப்பு தேவை என்று கூறியே, குறித்த ஆசிரியை, பொலிஸாரின் ஆதரவைக் கோரியதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை
அத்துடன் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 8,000 மாணவர்களும் 35,000 பெற்றோர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இருப்பினும், முதற்கட்ட விசாரணைகளில், ஆசிரியை தனது தனிப்பட்ட பிம்பத்தை உயர்த்திக் கொள்ள பொலிஸாரின் உதவியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது, எனவே இது அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வுக்காக, வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டனர், மேலும் உத்தியோகபூர்வ வளங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதில் பொலிஸார் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து இலங்கை பொலிஸ் விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பொலிஸ் பேச்சாளர் மனதுங்க கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த சம்பவம் எந்த இடத்தில் இடம்பெற்றது என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
