பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு
இலங்கை பொலிஸ் துறையில் பயிற்சிப் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகள் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
விண்ணப்ப நீடிப்பு விவரம்
கடந்த 2026 மார்ச் 27ஆம் திகதியிட்ட 2482ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்கவே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப இறுதித் திகதி கடந்த 2026 மே 8ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
எனினும், 2026 மே 15ஆம் திகதியிட்ட 2489ஆம் இலக்க புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் திகதி தற்போது 2026 ஜூன் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விண்ணப்பங்கள்
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக இணையவழி முறைமையினூடாக மட்டுமே விண்னப்பிக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவை நேரடியாகத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:-
071-8591925
011-2505202
011-2552953