டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையானது, அரசாங்கத்தின் கொள்கை அல்லது தவறான தீர்மானம் அல்ல எனவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உருவான உலகளாவிய நெருக்கடியின் விளைவே எனவும் விளக்கமளித்துள்ளார்.

இதன் காரணமாகவே எரிபொருள் விலைகள், எரிவாயு மற்றும் உர விலைகள், அத்துடன் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுமதி பொருட்களின் டொலர் விலையை விட இறக்குமதி பொருட்களின் டொலர் விலைகள் அதிகரித்தமை இலங்கையை பிரதானமாகப் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி குறித்த முடிவு
உலகளாவிய ரீதியில் டொலரை ஸ்திரப்படுத்துவதற்கும் டொலருக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, டொலருக்கான தேவை அதிகரித்து, முதலீடுகள் டொலரை நோக்கி நகரும் போக்கு காணப்பட்டதாகவும், இதன் காரணமாக ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டொலர் வலுவடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, வாகன இறக்குமதியை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
வாகன இறக்குமதியை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தனியார் வாகனங்களை வாங்குவதற்கான கோரிக்கை பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.
வாகனங்கள் மட்டுமல்ல, எந்தவிதமான இறக்குமதியையும் கட்டுப்படுத்தவோ அல்லது பொருளாதாரத்தை சுருக்கவோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பொருளாதாரத்தை முடிந்தவரை விரிவுபடுத்த நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை