தடுத்து வைப்பதில் மட்டும் பயனில்லை : இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் பொலிஸாருக்கு கடும் உத்தரவு
பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் கொலை செய்யத் தூண்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணை மந்தகதி
குறித்த வழக்கின் 15 ஆவது சந்தேகநபராகக் பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை என நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.
"சந்தேகநபரைத் தடுத்து வைத்திருப்பதில் மாத்திரம் பயனில்லை, விசாரணைகளை முறையாக முன்னெடுத்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்" என்று நீதிவான் கடுமையாகத் தெரிவித்தார்.

சந்தேகநபரான இந்தப் பெண், ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யப் பயன்படுத்தப்பட்ட போதிலும், தற்போது அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தேக்கநிலை நிலவுவதை நீதிமன்றம் அவதானிப்பதாக நீதிவான் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் முன்னிலை
சந்தேகநபர் தற்போது தனது இரண்டாவது 90 நாள் தடுப்புக்காவல் காலத்தைக் கடந்துள்ளதாகவும், அவர் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

நேற்றைய விசாரணையின் போது சந்தேகநபர்கள் 'ஸூம்' தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.