வட்ஸ்அப் - டெலிகிராம் ஊடாக பரவும் ஆபத்தான நிதி மோசடி! பொலிஸார் அவசர எச்சரிக்கை
வட்ஸ்அப் மற்றும் ரெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாகப் பரப்பப்படும் ஆபத்தான நிதி மோசடிகள் குறித்துப் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக அனுப்பப்படும் தீங்கிழைக்கக்கூடிய “.apk” கோப்புகள் (Files) மூலம் இந்த மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவசர எச்சரிக்கை
திருமண அழைப்பிதழ்கள் (Wedding Invitations),மின்சாரக் கட்டணப் பட்டியல்கள் (Electricity Bills),லொத்தர் வெற்றி அறிவிப்புகள் போன்ற வடிவங்களில் பெரும்பாலும் அனுப்பப்படலாம்.

இந்தக் கோப்புகளைப் பயனாளர்கள் கிளிக் செய்தவுடன், அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (Malicious Software) தானாகவே நிறுவப்படுகின்றன.
இதன் மூலம் ஹேக்கர்கள் (Hackers) பயனாளர்களின் தொலைபேசித் திரையைக் கட்டுப்படுத்துவதுடன், வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய இரகசியமான OTP (One Time Password) குறியீடுகளை உள்ளடக்கிய குறுஞ்செய்திகளையும் (SMS) வாசிக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
பொலிஸார் ஆலோசனை
இந்த மோசடியிலிருந்து தவிர்ந்து கொள்ளப் பொலிஸார் பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
நண்பர்களிடமிருந்து வந்தாலும் கூட, சந்தேகத்துக்குரிய “.apk” கோப்புகளை ஒருபோதும் தரவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம்.
செயலிகளைத் தரவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது அப்பிள் அப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள்.

தொலைபேசி அமைப்புகளில் (Settings) உள்ள 'Install Unknown Apps' எனும் தெரிவை முடக்கி வைப்பதை உறுதிப்படுத்துங்கள்.
இந்த மோசடிக்கு யாராவது பலியாகியிருந்தால் அல்லது அவர்களின் கணக்கு ஊடுருவப்பட்டது எனச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இது குறித்து அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் அடுத்து என்ன? படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam