சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பொலிஸார் முழு ஒத்துழைப்பு: பலதரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் முழுமையான ஒத்துழைப்புக்களுடனேயே சட்டவிரோத மணல் அகழ்வுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாகச் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை, மாறாக பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸார் மீது பொது அமைப்புக்களாலும் பொதுமக்கள் பிரதிநிதிகளாலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதாவது சட்டத்தினால் மணல் அகழ்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்புடன் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக முரசுமோட்டை பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளால் விவசாய வீதிகள், விவசாய நிலங்கள், நீர்ப்பாசனக் கட்டுமானங்கள் முற்றாகச் சிதைந்து வருகின்றன.
பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மணல் அகழ்வைத்தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட போது சம்பவ இடத்திற்கு மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுடன் சிவில் உடையில் வருகை தந்த பொலிஸார் இதைத் தடுப்பதாகக் கூறிவிட்டு அடுத்த நிமிடமே அவர்களின் பாதுகாப்புடன் மணல் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதே போன்று பளை பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளைத் தடுத்து வந்த கிராம அலுவலர் பிரதான வீதியால் சென்று கொண்டிருக்கும்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களால் கனரக வாகனத்தினால் மோதிய சம்பவம் இடம்பெற்றது.
இந்த திட்டமிட்ட தாக்குதலை மூடிமறைத்து ஒரு விபத்தாக பொலிஸார் பதிவு செய்திருப்பதாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிஸார் சொந்தமாகக் கனரக வாகனங்களை வைத்து அவர்களே சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் மாவட்டத்தில் இடம் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கு
முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறிதரன், எம் .ஏ. சுமந்திரன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் மக்கள்
பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும்
சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri