வாகரையில் ஆதிவாசிகளுக்கு பொலிஸார் நிவாரணப்பொதி வழங்கி வைப்பு
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் பயணக்கட்டுப்பாடு காரணமாக உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள ஆதிவாசி குடும்பங்களைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு ஒரு தொகை நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வாகரை பிரதேசத்தின் ஆதிவாசி மக்களின் தலைவர் அம்பலவர்கே நல்லதம்பி வேலாயுதம் பயணத் தடை காரணமாக தமது மக்கள் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஆதிவாசிகளின் தலைவர் ஊர்வக்கே வன்னிலத்தோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்ததையடுத்து குறித்த பிரதேசத்திற்கு ஒரு தொகை நிவாரண பொதிகளுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.ஹொட்டியாராச்சி, ஏறாவூர் பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி ஜெயந்த, வாழைச்சேனை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தனஞ்சயபெரமுன , மற்றும் வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரி ,ஜ.பி.விஜேயவர்த்தன ஆகியோர் கொண்ட பொலிஸாருடன் சென்று பணிச்சங்கேணி, மாங்கேணி, கிருமிச்சை, குஞ்சன் கல் குளம், கொக்குவில் போன்ற கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்துள்ளனர்.
இதன் பின்னர் ஆதிவாசி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்ட பொலிஸ் அத்தியட்சகர் தமது வழிகாட்டலில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் தெரிவித்த்துள்ளார்.
இதனையடுத்து ஆதிவாசிகள் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் உணவுப் பொருட்கள் வழங்கி
வைத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு நன்றியைத்
தெரிவித்ததுடன், மேலும் இது போன்ற தமது மக்கள் ஏனைய கிராமங்களில் வாழ்ந்து
வருவதாகவும் அவர்களுக்கும் நிவாரணப்பொதி வழங்க ஏற்பாடு செய்து தருமாறும்
கோரிக்கை விடுத்துள்ளார்.