பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! சிறப்பு கண்காணிப்பு குழு நியமனம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் விருந்துகள் தொடர்பில் அடுத்த சில நாட்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்நிலையில், இன்று முதல் வியாழக்கிழமை வரையில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, குறிப்பாக இரவில், நடத்தப்படும் விருந்துகள் மற்றும் கூட்டங்களை கண்காணிக்க சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாவ அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஒரு விருந்து நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பண்டிகை காலங்களில் விருந்துகளை நடத்தும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் கடந்த வாரம் எச்சரித்திருந்தனர்.
சுகாதார அமைச்சினால் வர்த்தமானி செய்யப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி உட்புற மற்றும் வெளிப்புற விருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று அந்த அமைப்பின் செயலாளர் எம்.பாலசூரிய கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களை கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற பல விருந்துகள் புத்திசாலித்தனமாக நடத்தப்படுவதாகவும், இது குறித்து தகவல்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற விருந்துகளை நடத்துபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்களைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தை மீறியதாகக் கருதப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வுகளை நடத்துவதாகக் கண்டறியப்பட்ட விடுதிகள் அல்லது உணவகங்களின் உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அவர் மேலும் கூறியுள்ளார்.