மன்னாருக்கு கொண்டுவரப்பட்டது தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல்
மாலைதீவில் கடந்த மாதம் 26ஆம் திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நேற்று இரவு 10 மணியளவில் மன்னார் - பனங்கட்டுக்கொட்டிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டுள்ளது.
டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் கடந்த 3ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தது.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின் பூதவுடல் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு பூதவுடல் எடுத்து வரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி, விடத்தல் தீவு, ஆண்டாங்குளம், அடம்பன் போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து அன்னாரது இல்லத்திற்கு பூதவுடல் நேற்று இரவு 10 மணியளவில் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டது.
இதன் போது விளையாட்டு கழக வீரர்கள், வர்த்தகர்கள், மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து பவனியாக பூதவுடலை எடுத்து வந்தனர்.
அன்னாரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
