பிலியந்தலையில் நிவாரணப் பொருட்களை விநியோகித்த பெண் அதிகாரி மீது தாக்குதல்
பிலியந்தலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த பெண் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார்.
பிலியந்தலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்து பெண் மேம்பாட்டு அதிகாரி வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உந்துருளியில் பயணித்த ஒருவர் தன்னைத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்துக்கு உரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளைத் தாக்குவது அல்லது அச்சுறுத்துவது பொறுத்துக் கொள்ளப்படாது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததற்காக கடந்த ஆண்டு கைது
செய்யப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை
வழங்கப்பட்டமையை பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.