வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என உத்தரவு
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமது உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி வெலே சுதா எனப்படும் சமந்த குமார மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது என சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வெலே சுதா தற்பொழுது பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் வெலே சுதா எனப்படும் விதானகே சமந்த குமார, தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமது உயிருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் சார்பில் அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சிலர் தடுப்புக் காவலில் இருந்த நிலையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் கோரியிருந்தது.