நளினிக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முந்தைய அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பியது. இந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக பேரறிவாளன் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் நளினியின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு நகலை சமர்பித்தார். மேலும் நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உச்சநீதிமன்ற உத்தவின் அடிப்படையில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டபிரிவின் அடிப்படையில் ஜாமீன் கோர முடியும். உச்சநீதிமன்றம் தான் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது. இதனால் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது.
இதனால் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்றனர். பின்னர் மனு மீதான விசாரணையை நாளைக்கு (மார்ச் 24) ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன், மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, தொடர்ந்து நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.
சுதந்திர இந்தியாவில் எந்த வழக்கிலும் எந்த கைதியும் இதுபோல் நீதிமன்றத்தை நாடியதில்லை. உச்ச நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மட்டும் தான் ஜாமீன் வழங்கியுள்ளது. அந்த உத்தரவு மற்ற கைதிகளுக்கு பொருந்தாது.
இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் கொலை வழக்கு இது. முன்னாள் பிரதமரை கொன்ற இவர்கள், வெறும் கொலை குற்றவாளிகள் மட்டுமல்ல.
இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும் . கைதிகளுக்கு ஆதரவாக மாநில அரசு வாதங்களை முன்வைக்கும் என்பதால் தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரியுள்ளார்.