முல்லைத்தீவு வட்டுவாகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்றவர் உடலமாக மீட்பு
முல்லைத்தீவு - வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை கடற்றொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை தொழில் நடவடிக்கைக்காக சென்ற 45 அகவையுடைய வேலு செந்தில்நாதன் என்ற குடும்பஸ்தர் வீடு திரும்பவில்லை.
பொலிஸில் முறைப்பாடு
இந்நிலையில், அவரின் மனைவி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று (26) காலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதன்போது, குறித்த வட்டுவாகல் பகுதியில் ஏனைய கடற்றொழிலாளர்கள் தேடுதல் நடத்தியபோது குறித்த நபர் சுரியில் அகப்பட்டு நீரில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.