மக்களுக்கு தரமான உணவு நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை
இலங்கை அரசாங்கம் மக்களுக்கு தரமான மற்றும் போதுமான உணவை நியாயமான விலையில் வழங்க நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்கள் நிறுவும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம், தேசிய உணவு மேம்பாட்டு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு இணைந்து, ஏற்கனவே இயங்கி வரும் உணவக உரிமையாளர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் உணவகம் எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி நாராஹேன்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, ஏற்கனவே இயங்கும் உணவகங்களில் தரத்தை உயர்த்தும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) முக்கியக் கூட்டம் நடைபெற்றது.
சுகாதார பாதுகாப்பு உடைய உணவுகளை மக்கள் பெறுவதற்கான உரிமையை உறுதிசெய்ய, தேவையான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
உணவகங்களில் சுகாதாரச் சட்டங்களை கடைப்பிடிக்கச் செய்வது, நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டத்தின் பிரதான நோக்கம், இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மலிவாகவும், தரமாகவும், சுகாதாரமான உணவை பெறுவதை உறுதி செய்வதாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
