வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மட்டு. மக்கள் (Photos)
புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சுகாதார நடைமுறைகளை பேணியவாறு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த வழிபாடுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
இதன்போது கோவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு நகரில் வானவேடிக்கைகளுடன் புதுவருடத்தினை மக்கள் வரவேற்றனர்.
இன்று நள்ளிரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்துவந்த மக்கள் மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடியதன் காரணமாக நள்ளிரவில் நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
இரண்டு வருடங்களின் பின்னர் புதுவருடத்தினை வரவேற்பதற்காக மக்கள் இம்முறையே ஒன்றுகூடியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இசை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் அதில் பெருமளவானோர் ஆடிப்பாடி புதுவருடத்தினை வரவேற்றனர்.
இதன்போது நள்ளிரவு 12மணி முதல் காந்திபூங்காவில் பாரியளவில் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
கோவிட் அச்சுறுத்தல் நாட்டில் நீடித்துவரும் நிலையிலும் ஒமிக்ரோன் தொற்று கொத்தனி ஏற்படும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்திய நிலையிலும் பெருமளவான மக்கள் கூடியதன் காரணமாக சுகாதார அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாத நிலையிலும், சுகாதார நடைமுறைகளை பேணாத நிலையிலும் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்ததை காணமுடிந்தது.
எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையா பாரியவில்
வானவேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு புதுவருடத்தினை வரவேற்றது இதுவே முதன்முறையாகும்.













