அரசின் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசையில்! மொட்டுக் கட்சி கடும் சாடல்
எவ்வித உலகளாவிய நெருக்கடிகளும் இல்லாத சூழலில், அரசு திட்டமிட்டு எரிபொருள் வரிசைகளையும், QR குறியீட்டு முறையையும் உருவாக்கி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று(16.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது என இளம் தொழில்முனைவோர் மத்தியில் ஜனாதிபதி அளித்த உறுதிமொழி, ஒரு வாரத்திலேயே பொய்த்துப் போய்விட்டது.
பொருளாதார நெருக்கடி
நாட்டின் பொருளாதாரத் தூண்களான தொழில்முனைவோர் பற்றி அடிப்படைப் புரிதல் கூட இல்லாத ஒரு ஜனாதிபதி நாட்டை வழிநடத்துவது கவலைக்குரிய விடயமாகும்.

கொவிட் பெருந்தொற்று மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த காலங்களில் மக்களுக்குத் தடையின்றி உணவு மற்றும் எரிபொருளை வழங்க எமது அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால் இன்று அத்தகைய நெருக்கடிகள் ஏதுமில்லாத நிலையில், அரசின் நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
போலியான சாட்சி
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விவகாரத்தில் சாட்சியாளரை அச்சுறுத்தி, அரசியல்வாதிகளின் பெயர்களை உள்ளடக்கி வாக்குமூலம் பெற முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர் எனக் குற்றஞ்சாட்டிய நந்தன குணதிலக்க மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று ஜனநாயகம் புதைக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்த சாகர காரியவசம், போலியான சாட்சியங்களை உருவாக்கி அரசியல் எதிரிகளைச் சிறையிலடைக்கும் அபாயகரமான போக்கை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam