காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் ஒரு அரச பயங்கரவாதம்- கம்மன்பில குற்றச்சாட்டு
போராட்டம் மீது தாக்குதல் நடத்துவது அரச பயங்கரவாதமே என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்தும் வகையில், அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டவர்களை கோபப்படுத்தி, அவர்களை போராட்ட பூமிக்கு அனுப்பியது அரசாங்க உறுப்பினர்களாயின் இதனை அரச பயங்கரவாதம் என்றே கூறவேண்டும் என்று அவர் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இந்த தாக்குதல்களின்போது பாதுகாப்பு படை உரிய முறையில் செயற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
நெருப்பை பஞ்சையும் அருகருகில் வைத்தால், தீப்பற்றும் என்ற தெரியாதவர்களே பாதுகாப்பு தரப்பில் இருப்பதாக கம்மன்பில குறிப்பிட்டார்.
காலிமுகத்திடலுக்கு, அலரிமாளிகையில் இருந்து செல்வதற்கு ஒரு கிலோ மீற்றர் உள்ளது. இந்தநிலையில் தாக்குதல்காரர்களை நிறுத்துவதற்கு போதிய அவகாசம் இருந்தது
எனினும் பொலிஸ் மற்றும் இராணுவத்தை செயற்படாமல் செய்தது யார்? பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மீது இது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனவே அவர்கள் மீது அரசாங்கம் விசாரணையை நடத்தவேண்டும் என்று கம்மன்பில குறிப்பிட்டார்.