நாடாளுமன்றில் இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் பறிமுதல்!
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முடிந்த பின்னர் அதனை காணொளிப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் இரண்டு ஊடகவியலாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகிய ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் முறையிட்டார்.
நடப்பு பிரதமர் சுதந்திர ஊடகத்துக்கு சார்பானவர் என்ற அடிப்படையிலும் ஜனநாயகத்தின் நான்காவது துாண் என்ற அடிப்படையிலும் குறித்த ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் மீள வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்
இதனையடுத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மனுஷ நாணயக்கார, ஆளும் கட்சியின் சண்டித்தனம் காரணமாகவே நாட்டில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று நினைவுப்படுத்தினார்.