விளக்கமறியலில் வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய கடற்றொழிலாளர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.
26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களையும், இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு மீண்டும் நேற்றையதினம் (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 5 கடற்றொழிலாளர்களையும் இம்மாதம் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



