வைரசுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் எதிரணி!அமைச்சர் வெளியிட்ட தகவல்
"நாட்டில் மீண்டுமொரு கோவிட் அலை ஏற்பட்டு, நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை எதிரணி ஏற்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று சபையில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேறு நாடுகளில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. எனினும், இங்கு என்ன நடக்கின்றது? வைரசுடன் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்கவே எதிரணி முற்படுகின்றது.
இது வெட்கத்துக்குரிய விடயமாகும். பொலிஸார் அரசியல்வாதிகளின் கட்டளைகளின் பிரகாரம் செயற்படவில்லை. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரமே செயற்படுகின்றனர்.
இவ்வாறான போராட்டங்கள் மூலம் மீண்டும் கோவிட் பரவும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தால், அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் உரிமை எவருக்கும் கிடையாது.
எனவே, நாட்டில் மற்றுமொரு அலை ஏற்பட்டு நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை
ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் எதிரணி ஏற்க வேண்டும். பொலிஸாரின்
கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.