யாழில் முடக்கல் நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முடக்கல் நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அறிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டத்தில் கோவிட் நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்றது. இதேவேளையில் நாடு பூராகவும் நாளை வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட் ஒழிப்பு மத்திய நிலையத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் வீடுகளில் இருந்து ஒருவர் வெளியில் செல்லலாம் என மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படும்.
அந்தவகையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், காஸ் மற்றும் விவசாய மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் அடங்கலான வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முடக்கல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே யாரும் பயணிக்க வேண்டியிருந்தால் வழமைபோன்று ஊரடங்கு நேர நடைமுறை போன்று அவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் சென்று தங்கள் அனுமதியைப் பெற்று பயணிக்க முடியும்.
அதேவேளை, அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையோர் பயணிக்க அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் சுகாதார நடைமுறையையும் அரசின் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி தற்போது நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்வரவேண்டும்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வெளிமாகாணங்களுக்கான பயணங்களில் ஈடுபடுவோர் தமது வாகன இலக்கம், சாரதி, நடத்துநர் பெயர் விவரங்கள் அடங்கலான விவரங்களை பிரதேச செயலர் ஊடாக உரிய முறையில் மின்னஞ்சல் ஊடாக எமக்கு விண்ணப்பித்தால் அதனை நாங்கள் மின்னஞ்சல் ஊடாக மாகாணங்களுக்கு இடையில் உள்ள காவலரண்களுக்கு அந்த மின்னஞ்சல்களை அனுப்பி தமது பயணத்தை இலகுவாக்க கூடியதாக இருக்கும்.
அத்துடன் விவசாய, மீன்பிடி உற்பத்திப் பொருள் போக்குவரத்தில் ஈடுபடுவோர் குறித்த திணைக்களங்களின் அனுமதியைப் பெற்று உரியவாறு விண்ணப்பிக்குமிடத்து அதற்குரிய அனுமதிகளும் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.
எனவே, இந்த முடக்கல் நிலைமையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தமக்குரிய
அனுமதியைப் பெற்றுக்கொள்வது தமது பயணங்களின்போது இலகுபடுத்தும் என்பதோடு
குறித்த பயணங்களின்போதும் சுகாதார நடைமுறை ஊரடங்கு நடைமுறையையும் தவறாது
பின்பற்றிச் செயற்பட வேண்டும் என்றார்.