யாழில் கடந்த 5 நாட்களில் ஒரு இலட்சம் தடுப்பூசி ஏற்றல்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமையுடன் ஐந்து நாள்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 376 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாத் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் எனவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு முதலாவது தடவை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
தற்போது மூன்றாம் கட்டமாக இரண்டு இலட்சம் பேருக்கு முதலாவது தடவையாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் ஐந்தாவது நாளும் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ரீதியாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகின்றது.
நேற்றைய ஐந்தாவது நாளில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் வைத்தியசாலைகளில் என 22 ஆயிரத்து 34 பேர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.