நாடளாவிய ரீதியில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை வரலாற்று சாதனை (Photos)
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 9 ஏ பெறுபேறுகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி அக்செயா அனந்தசயனன் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,

இலட்சியம்
மருத்துவராகுவதே எனது இலட்சியம். க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம்இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது.
பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன். உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம்.
பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞான பாடத்திற்கும், ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும், தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி மூலமாக முதலாம் இடம்
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளதுடன், 8 ஏ பெறுபேற்றை 59 பேரும், 7 ஏ பெறுபேற்றை 22 பேரும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri