நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஏற்றுமதியாளர்களுக்கு விசேட சலுகை! உயர்மட்டக் கலந்துரையாடல்
ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசு அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று(19.03.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் பெறுவதில் சிக்கல்
இங்கு குறிப்பாக ஏற்றுமதித் துறைக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து, உருவாகியுள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்வில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கம்முவ, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன், பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர், ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்கள் மன்றத்தின் தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ, இலங்கை இறப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சிசிர ரணதுங்க, இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹஸிபா அக்பரலி மற்றும் இலங்கை வர்த்தக சபை, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தென்னை சார்ந்த தொழிற்துறையினர் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை உள்ளிட்ட ஏற்றுமதித் துறை சார்ந்த உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.




