ஒடிசா தொடருந்து விபத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த தமிழர்! குவியும் பாராட்டு
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒடிசா தொடருந்து விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற தமிழர் ஒருவர் உதவியுள்ள தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரரான வெங்கடேசன் என்பவரே இவ்வாறு விரைந்து செயற்பட்டுள்ளார்.
இந்த தொடருந்து விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்த தமிழர் வெங்கடேசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
நிதானமாக செயற்பட்ட வீரர்
அந்த பதற்றமான சூழ்நிலையும் நிதானமாக செயற்பட்ட தொடர்பில் அவரை பாராட்டி டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,“ஒடிசா தொடருந்து விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமாக இருந்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர் வெங்கடேசன் அவர்கள்.
உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்.”என பதிவிட்டுள்ளார்.
101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை
இதேவேளை இந்தியாவையே உலுக்கிய ஒடிசா தொடருந்து விபத்தில் 278 பேர் பலியாகினர்.
இந்த கோர விபத்தில் 177 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 101 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடருந்தில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் வெங்கடேசன், மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மீட்புப்பணியின்போது களத்தில் நின்று நிலவரத்தை வீடியோவாக அவர் எடுத்து வெளியிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |