இவ்வருடம் 22 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22,19209 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்திய பயணிகள்
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து ஆயிரத்து 97 ஆகும்.

மேலும், ஜேர்மனியில் இருந்து ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 355 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 99 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 2 இலட்சத்து 939 சுற்றுலாப் பயணிகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு இலட்சத்து ஆயிரத்து 12 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 553 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸில் இருந்து ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 802 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.