கொழும்பு - நானுஓயா பேருந்து விபத்து - ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் (video)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்று மாலை, கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதுடைய ஒருவர் நேற்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்
மேலும் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேருந்து விபத்தின் பின்னர், நானுஓயா, ரதெல்ல குறுகிய வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்காக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மாணவர்களை சுற்றுலாவிற்கு ஏற்றிச்சென்ற பேருந்து மீது வான் மீது மோதியதில் வானில் பயணித்த 9 பேரில் ஆறு பேரும், பின்னால் வந்த முச்சக்கர வண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் நானுஓயா பகுதியில் சுயதொழில் ஈடுபடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த மற்றுமொரு பாடசாலை மாணவி தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்திற்கான காரணம்
குறித்த பேருந்து விபத்துக்குள்ளான போது பேருந்தில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் 11ஆம் ஆண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 42 பேர் உட்பட 53 பேர் பயணித்துள்ளனர்.
பேருந்தில் இருந்த மாணவர்களும், வான் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவா,
“இந்தப் பேருந்தின் சாரதி ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடையவர். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அறிய முடியவில்லை.பேருந்தின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தில் சில அலட்சியங்கள் உள்ளது.ஆனால் உறுதியாக எதனையும் கூறமுடியாது. தொழில்நுட்ப கோளாறா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தெளிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.