எதிரணிகளின் ஆட்சிக் கனவு நனவாகாது! நாமல், சஜித், ரணில் தரப்புகளை எள்ளிநகையாடிய என்.பி.பி. அரசு
ஆட்சிப்பீடம் ஏறுவோம் என எதிரணிகள் கனவு காணக்கூடாது என்றும், சஜித் அணிக்கோ அல்லது ரணில் அணிக்கோ அல்லது ராஜபக்ச அணிக்கோ ஆட்சியமைக்கும் கனவு இருந்தால் இப்போதே அந்தக் கனவைக் கலைத்துவிட வேண்டும் என்றும் ஆளும் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மென்மேலும் வலுப்பெற்று வருகின்றது. இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் அசைக்க முடியாது.
நாட்டு மக்கள் அடித்தளம்
பல தசாப்தங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடர நாட்டு மக்கள் அடித்தளம் வைத்துள்ளனர். ராஜபக்சக்களின் குழந்தை நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கி எம்மை ஒன்றும் செய்ய முடியாது.

அவர் சிறுபிள்ளைத்தனம் கொண்டவர் என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்தமையை மறக்கக் கூடாது.
சஜித் பிரேமதாஸ் கடந்த இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக வர முயன்றார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. திருடர்களைப் பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவும் குறுக்கு வழியில் மீண்டும் ஜனாதிபதியாக வரலாம் என்று கனவு காண்கின்றார். அந்தக் கனவு இனி நனவாகாது என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |