புத்தாண்டு கால பொது போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு!
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் தடங்கள் இன்றி செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (03.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் முக்கிய நகரங்களை உள்ளடக்கிய பேருந்துகளை பயணிகள் செல்வதற்கு வழங்குமாறு அனைத்து வீதி போக்குவரத்து சேவைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசேட பேருந்துகள் ஏற்பாடுகள்
கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை முனையங்களில் புத்தாண்டு விசேட பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான விசேட பேருந்து சேவை ஏப்ரல் 07ஆம் திகதி ஆரம்பமாகி 18ஆம் திகதி வரை தொடரும். ஆரம்பத்தில் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.
மேலும் 250 பேருந்துகள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேவைகளின் தேவையை கருத்திற்கொண்டு பேருந்துகள் ஒதுக்கப்படும். புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் கொழும்பிலிருந்து மற்றும் கொழும்பிற்கு பேருந்துகள் சேவைகளை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
தொடருந்து சேவைகள்
இதேவேளை, புத்தாண்டுக்கு முன்னரும் பின்னரும் போக்குவரத்தை வழங்குவதற்குப் பெருமளவான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை மற்றும் புத்தாண்டுக்காக தற்போதுள்ள பெரும்பாலான ஊழியர்களின் விடுமுறை கோரிக்கை காரணமாக, இந்த பண்டிகையின் போது தொடருந்து சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.