திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
தற்போது நிலவும் போர்ச்சூழல் மற்றும் இறக்குமதி செலவுகள் கணிசமாக அதிகரித்ததன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோகம் மற்றும் போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து நாடு முழுவதும் விலைகள் மாறுபடும் என்றும், 2026 ஏப்ரல் 6 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட ரீதியாக விலைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மிதக்கும் கிடங்கில் இருப்பு
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்திற்காக ஆர்டர் செய்யப்பட்ட 38,000 மெட்ரிக் டொன் எரிவாயு, மாலைத்தீவில் உள்ள மிதக்கும் கிடங்கில் தற்போது முழுமையாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவை இந்த மாதம் முழுவதும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் என்றும் கூறியுள்ளது.
20,000 மெட்ரிக் டொன்கள் கொண்ட ஒரு கப்பல் தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும்,20,000 மெட்ரிக் டொன்கள் கொண்ட மற்றொரு கப்பல் தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிவாயு கையிருப்பு
அதன்படி, மே மாதத்தில் தடையற்ற எரிவாயு விநியோகத்தைப் பராமரிக்கப் போதுமான கையிருப்பு உள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 4,765 ஆக உள்ளது. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 1,910 ஆகும்.
அதேபோல், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 140 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 890 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.