முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் அவரை தற்போதைய சூழலில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றுக்கு மாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
குறித்த அறிவித்தலை நேற்று விடுத்திருந்தது.
கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில் தன்னையே மனுதாரராகப் பெயரிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97ஃ2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போதே மனுதாரர் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கியது.
குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றின் நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ இ எஸ். துரைராஜா மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது கடந்த தவணையின் போது அசாத் சாலி விவகார விசாரணைகளை நிறைவு செய்ய 3 வார கால அவகாசத்தைச் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோரியிருந்த நிலையில் அவ்விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என அவர் நேற்று மன்றுக்கு அறிவித்தார்.
இதன்போது அசாத் சாலி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரிதவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணிகளான தர்மராஜா சந்திரகேஷ, பிருந்தா ஆகியோர் ஆஜராகினார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்களை முன் வைத்ததுடன், கடந்த 18 ஆம் திகதி தாக்கல் எய்த நகர்த்தல் பத்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.
கடந்த 16 ஆம் திகதி அசாத்சாலி சுகயீனம் காரணமாகத் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் தற்போது அவர் சாதாரண சிகிச்சை அறையான ( வோர்ட்) 49 ஆம் அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போதும் அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறினார்.
எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுடன் கூடிய சூழலில் அசாத் சாலியை உடனடியாக கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றில் ( மேச்சன் வோர்ட்) சிகிச்சை பெற அனுமதிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதிட்டார்.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு முடியுமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் திறந்த மன்றில் கேள்வி எழுப்பிய நீதியரசர் எஸ். துரைராஜா இன்று நாட்டில் நிலவும் சூழலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்து மாரடைப்புக்கு உள்ளாகியுள்ள இவ்வழக்கின் கைதிக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளதா என வினவினார்.
அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் அவ்வாறான வசதிகள் இல்லை எனக் குறிப்பிட்டார். எனினும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் கோரிக்கையில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவுக்குத் தடுப்புக் காவல் கைதியை மாற்றுவதாக இருந்தால் சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் அது இடம்பெறல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிச் முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் அசாத் சாளியைக் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றில் சேர்க்க அனுமதியளித்தது.
அத்துடன் இந்த விவகார வழக்கை அவசர நிலை வழக்காகக் கருதி மீள ஜூன் 2 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்கவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. முன்னதாக கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அசாத் சாலி சார்பில் தன்னையே மனுதாரராக பெயரிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் சி.ஐ.டி.யின் விசேட விசாரணைப் பிரிவு இலக்கம் - 1 இன் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறித்த அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனுவில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வண்ணமும் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டதன் மூலம் தண்டனை சட்டக்கோவையின் 120 ஆம் அத்தியாயம் மற்றும் பயங்கரவாதத் தனிச்சட்டத்தின் 2ம் பிரிவின் கீழும் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாகக் கூறி குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் மேலதிக விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அசாத் சாலியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வாறாயினும் இந்த கைதும் தடுத்து வைப்பும் அரசியல் அமைப்பின் 12(1) உறுப்புரை பிரகாரம் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமன் எனும் உறுப்புரையை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 12(2) உறுப்புரையின் பிரகாரம் இன, மத, மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை பிறந்த இடம் உள்ளிட்ட எந்த காரணியையும் அடிப்படையாகக் கொண்டும் பாகுபாடு காட்டப்படலாகாது எனும் விடயமும் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதனைவிட அரசியலமைப்பின் 13(1) இ 13(2) ஆம் உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ள சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கு மாற்றமாக ஒருவர் கைது செய்யப்படல் கூடாது. கைது செய்யப்படும் போது அவர் கைது செய்யப்படுவதற்கான காரணம் அவருக்குக் கூறப்படல் வேண்டும், மற்றும் கைது செய்யப்படும் நபர் அண்மையில் உள்ள நீதிமன்றில் ஆஜர் செய்யப்படல் வேண்டும் போன்ற விடயங்களை மீறுவதா அசாத் சலையின் கைதும் தடுத்து வைப்பும் அமைந்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பின் 14(1) ஆம் உறுப்புரையூடக வழங்கப்பட்டுள்ள கருத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசியலமைப்பின் உறுப்புரைகளை மீறுவதாக அசாத் சாலியின் கைது அமைந்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவு சட்டவலுவற்றதென தீர்ப்பரிவிக்குமாறும் இடைக்கால தடை உத்தரவு வழங்கி கைதியான அசாத் சாலியை விடுதலை செய்யும்படியும் இம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.