புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான விசேட அறிவித்தல்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நடைபெறவுள்ளது.
எவ்வித அச்சமும் இன்றி மாணவ,மாணவியர் பரீட்சைக்கு தோற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வினாத்தாள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
பகுதி ஒன்று வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கு ஒரு மணித்தியாலம் வழங்கப்படும்.காலை 9.30 மணிக்கு பகுதி ஒன்று வினாத்தாள் ஆரம்பமாகும்.
பகுதி இரண்டு வினாத்தாளுக்கு ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் கால அவகாசம் வழங்கப்படும்.பகுதி இரண்டு முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 255062 மாணவ,மாணவியரும், தமிழ்மொழி மூலம் 85446 மாணவ மாணவியரும், பரீட்சைக்காக தோற்ற உள்ளதுடன், 2943 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்காக 496 பரீட்சை இணைப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதுடன், கோவிட் பெருந்தொற்று உறுதியான மாணவ,மாணவியர் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக 108 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்குள் பெற்றோர் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
பரீட்சைக்கு விடையளிப்பதற்கான தேவையான காகிதங்கள் மற்றும் அழிப்பான் போன்றவற்றை மாணவர்கள் எடுத்துச்செல்ல வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.