இந்தியாவை பகைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல
கொழும்பு துறைமுக நகரத்தை நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வருடத்தில் ஒரு முறை கோப் மற்றும் கோபா தெரிவுக்குழுக்களிடம் துறைமுக நகரின் கணக்காய்வுகளை முன்வைக்க வேண்டும் என்ற சரத்தை கொண்டு வருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமானது கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உள்நோக்கத்தில் கொண்டு வரும் சட்டமாக இருக்கலாம் என வெளிநாடுகள் கூட சந்தேகம் வெளியிட்டுள்ளன.
அரசாங்கம் இலங்கையில் சீனா கால் பதிக்க இடமளித்து வருகிறது. பிராந்திய வல்லரசான இந்தியாவை பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.