வெற்றுச் சவடால்களுக்கு அஞ்ச மாட்டோம்..! ரெலோ பகிரங்கம்
ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் தமிழரசுக் கட்சி கோட்டை விடுகின்றது என ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
அவரால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடடுள்ளார்.
வன்னி நிலப்பரப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்குப் பல தடவைகள் தமிழரசுக் கட்சியுடன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டன.
இதன்பின் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இது சாதாரணமாக ஏற்படுத்தப்படவில்லை. பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில்தான் சாத்தியமானது.
இதன் பின் தோன்றிய அரசியல் சூழ்நிலை மாற்றங்களில் வன்னி நிலப்பரப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளில் சபைகளை வலுப்படுத்துகின்ற நிலைப்பாடு பற்றி பேசவே நாங்கள் அழைக்கப்பட்டோம்.
அதன் பிரகாரம் கடந்த திங்கள் மதியம் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அலுவலகத்தில் அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனுடன் சந்திப்பு நடைபெற்றது.
அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையும் என்று தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார்.
தலைமைகளின் வறட்டுக் கௌரவம்
உங்கள் கருத்துக்கள் பயனற்றவை. வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகின்றது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களைப் பெற்றுள்ளார்கள்.
தமிழ்த் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்தச் சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். மேலும், கிழக்கு மாகாணத்தில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்தோம்.
இன்னும் காலம் பிந்தவில்லை. தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு, கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை செய்ய முடியும்.
அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகின்றோம் எனவும் தெரிவித்தோம். ஆனாலும் இணக்கமான சூழ்நிலைக்குப் பதிலாக வறட்டு சவடால்களே பதிலாகின.
தனிமனித வீர வசனங்களால் எமது இனத்தை நேர்த்தியான பாதையில் வழி நடத்த முடியாது. மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியைக் கைப்பற்றுவதே மக்கள் எதிர்பார்ப்பு. அதைச் செய்வதற்கு விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம்.
தலைமைகளின் வறட்டுக் கௌரவம் இதற்குத் தடையாக இருக்கக் கூடாது. எப்பொழுதும் ஒற்றுமைக்காகவே ரெலோ பாடுபட்டு வந்துள்ளது. அதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் நாங்கள்.
அதைத் தவறாகப் புரிந்து கொண்டு வீர வசனங்கள் பேசுவதில் அர்த்தம் இல்லை. வெட்டிச் சவடால்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளியோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
