தேர்தலை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை : சம்பிக்கவிடம் ரணில் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (24.02.2024) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்த எதிர்பார்த்துள்ளோம். நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளது.
மேலும், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசு செயற்பட்டுள்ளது. எனவே,அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும்.
அதேநேரம், அரசியல் பேதமின்றி நாட்டுக்கான பொதுவான வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள திறந்த அழைப்பையும் இத்தருணத்தில் நினைவு கூறுவதோடு, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் ஏனைய அரசியல் கட்சிகளின் அனைத்து சாதகமான முன்மொழிவுகளையும் உள்ளடக்குவதற்கு தயங்கமாட்டேன்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சிறந்த பதிலை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
