தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது : இரா.சாணக்கியன் (Photos))
தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்று சொல்லும் எவருக்கும் நல்ல எதிர்காலம் அமையாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இங்கு கருத்து தெரிவித்த அவர்,
தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு
இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை.
தந்தை செல்வா காட்டிய வழியில் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை காணவேண்டும்
என்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் முன்னுதாரணமான செயற்பாடுகளை
வெளிப்படுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாலிபர்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் உறுதியாகயிருக்கின்றார்கள். அவர்களினால் நான் 29 வயதில் நாடாளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டேன்.
வடகிழக்கின் தமிழர்களின் நிலைமை
வடகிழக்கின் தமிழர்களின் நிலைமை, இந்த மாவட்டத்தின் தமிழர்களின் நிலைமையென்பது தமிழர்களை அடக்கி தமது ஆட்சியதிகாரத்தினை தக்க வைப்பதை நோக்காக கொண்டே இடம்பெற்று வந்துள்ளது.
இந்த செயற்பாடு தந்தை செல்வா காலத்திலும் தலைவர்
சம்பந்தன் காலத்திலும் இவ்வாறுதான் நடைபெற்றுவருகின்றது.
காணிகள் தான் ஒரு இனத்தின் அடையாளமாகவுள்ளது.
கடந்த 75 வருடமாக எமது அடையாளங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வந்த செயற்பாடுகள் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலும் நடைபெறுவது என்பது வேதனையான விடயமாகும்.
பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள்
அண்மையில் வவுனியா வெடுக்குநாறி மலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு அங்கு பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தமிழ் மக்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.
இவற்றினையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் இருப்பது கவலைக்குரியதாகும்.
இதனையும் தாண்டி போராட்டம் முன்னெடுப்பவர்களை அடக்குவதற்காக 1979 ஆம் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் 44 வருடங்களாக அதிகூடிய அளவில் தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதனை புதிய வடிவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட மிக மோசமான சட்டத்தினை புதிய வடிவில் கொண்டுவருவதற்கு ரணில் அரசு முன்னெடுக்கின்றது.
மிகமோசமான சட்டம்
சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சட்டம் என்ற வகையில் புதிய ஒரு சட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது.
இது பயங்கரவாத தடைச்சட்டத்தினை விட மிகமோசமான சட்டம் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களின் பார்வையில் புதிதாக கொண்டுவரப்படும் சட்டம் மிக மோசமான சட்டமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு வடகிழக்கில் ஆரம்பித்து நாடுமுழுவதிலும் அனைத்து இன மக்களினதும் ஆதரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் தலைவர்கள்
அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்காமல் அதனைவிட மோசமான சட்டத்தினை கொண்டுவருவார்களானால் இந்த நாட்டினை ஆட்சி செய்யும் தலைவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதையே சொல்லவேண்டும்.
இந்த நாட்டின் தலைவர்கள் திருந்தாவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லாத நாட்டில் இலங்கையர்கள் என்றுசொல்லும் எவருக்கும் நல்லதொரு எதிர்காலம் அமையாது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன், வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
