இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை!
கொரோனாவின் புதிய உருமாற்ற பாதிப்பு குறித்த அச்சத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சிங்கப்பூரில் வைரஸின் புதிய திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.எனினும் இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் வரும் விமானங்களை இடைநிறுத்த இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய ராச்சியத்தின் மூலமே இந்த இரண்டு நாடுகளிலும் புதிய வைரஸின் தோற்றம் வெளிவந்துள்ளது.
எனினும் இது இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் அதன் காரணமாக பாரிய பாதிப்புகள் இன்னும் ஏற்படவில்லை என்றும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்கால தகவல்களை பொறுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு வெளிவந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அங்கிருந்து வரும் விமானங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்தது.
இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஆறு பேருக்கு கொரோனாவின் புதிய உருமாற்ற வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரிலும் வைரஸின் புதிய மாறுபாட்டைக் கொண்ட நோயாளிகளைக் கண்டறிந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.