ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்களுக்குப் பைத்தியமில்லை – ஐக்கிய மக்கள் சக்தி
ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நாட்டை பொருளாதார ரீதியாக வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதி பீடமேற்றுவதற்கு இந்த நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அவர் பத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதைக் கூடத் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
2029-இல் இவர்தான் நல்ல பையன் எனக் கூறி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு யாராவது ஆதரவாகக் கையை உயர்த்தினால், அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தங்களைப் போல் அல்லாமல் ராஜபக்சக்களிடம் அதிகளவில் பணம் உள்ளது. அதனால், எந்நேரத்திலும் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவந்து பிரம்மாண்டமான பேரணிகளை நடத்த அவர்களால் முடியும்.
ஆனால், அத்தகைய செயற்கையான கூட்டங்களைக் கண்டு அச்சப்படவோ அல்லது பெரிதாக யோசிக்கவோ தேவையில்லை ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.