ஹிஷாலினி மரணம் தொடர்பில் ஏன் எவரும் கைதாகவில்லை! ரிஷாட் என்பதால் அச்சமா?
ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை மற்றும் மந்தமான விசாரணைகள் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ரிஷார்ட் பதியூதீனின் அரசியல் செல்வாக்கு இந்த விசாரணையில் தாக்கம் செலுத்துகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் ஏற் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ரிசார்ட் பதியூதீனின் வீட்டில் சிறுமி உயிரிழந்தமைத் தொடர்பில் செய்யப்படும் விசாரணைகள் வேகமாக இடம்பெறுவதாக எமக்கு தெரியவில்லை.இறந்த அந்த சிறுமிக்கு நீதி கிடைப்பது போன்று எமக்கு தெரியவில்லை.
இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? 13 வயதிலிருந்து 16 வயது வரை குறித்த சிறுமி நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களின், அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அவர் பல தடவைகள் பல முறை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். அது தொடர்பான விசாரணைகளை வேகமாக முன்னெடுக்காமைக்கு என்ன காரணம்?
முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியூதீனின் வீட்டில் இந்த சம்பவம் நடந்த காரணத்தினாலா இது பற்றிய விசாரணைகளை வேகமாக முன்னெடுக்காமல் உள்ளீர்கள்? என கேட்க விரும்புகின்றோம்.
16 வயதான ஒரு சிறுமியை தற்கொலை செய்த்துகொள்ளும் அளவிற்கு தூண்டியது யார்? அதை தேடுவது பொலிஸாரின் கடமையல்லவா? வேறு இடங்களில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்திருந்தால் அங்கு பொலிஸார் செயற்படுவது போன்ற, வேகமான செயற்பாட்டை ஏன் காணமுடியவில்லை.
நாட்டின் சட்டம் இயற்படும் ஒரு இடத்தின் பிரதிநிதியாக, பல அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்த ரிஷார்ட் பதியூதீன் பல குற்றங்களை செய்துள்ளார். தெரிந்துகொண்டே சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
அடுத்தது அந்த சிறுமி இந்த அளவு மன உளைச்சலுக்கு உள்ளாகும் வரை அவர் தொடர்பில் தேடி பார்க்கவில்லை. அந்த சிறுமி தனக்கு தானே தீ வைத்து தற்கோலை செய்து கொள்ளும் அளவிற்கு பிரச்சினை நடந்துள்ளது. இன்னமும் ஏன் இது பற்றிய விசாரணைகள் மந்த நிலையில் காணப்படுகின்றது.
எமக்கு தெரியும் இந்த நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், அரச சேவையில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பிலும் பலவந்தவமாக இவ்வாறான சிறுமிகளையே வீட்டு பணிப்பெண்களாக அமர்த்தியுள்ளனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரச்சினை அல்ல இது. இங்குள்ள செல்வந்தர்கள் மலையகத்தில் கஷ்டத்தில் உள்ள சிறுமிகளை தம் வீட்டில் வேலைக்கு அமர்த்தி, இறுதியில் தம் பாலியல் ஆசைகளை அவர்கள் ஊடக பலவந்தமாக நிறைவேற்றிக்கொண்ட பின் அவர்களை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளிவிடுகின்றார்கள்.
ஆகவே இந்த சம்பவத்திற்கு சரியான நீதி நிலைநாட்டப்படுமாக இருத்தால், இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாராபட்சமின்றி தண்டிக்கப்படுவார்களாக இருத்தால். நிச்சயமாக எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களில் இருந்து பல சிறுமிகள் காப்பாற்றப்படுவார்கள்.
இந்த விடயம் தொடர்பாக இன்னுமும் எவரும் கைது செய்யப்படாதது ஏன்? இந்த அரசாங்கத்திலுள்ள யாருடைய ஒத்துழைப்பில் இன்றும் ரிஷாடின் வீட்டார் இன்னும் வெளியில் சுதந்திரமாக இருக்கின்றார்கள்?
எமக்கு தெரியும் ரிசார்ட் பதியுதீன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலும் இருந்தார். அதற்கு முன்னைய அரசாங்கத்திலும் முக்கிய அமைச்சராக இருதார்.இன்று அவர் யாருடைய பாதுகாப்பில் உள்ளார்? அவருடைய குடும்பம் யாரால் பாதுகாக்கப்படுகின்றது.