நாமலால் மகிந்தவாக மாற முடியாது - நிரோஷன் பாதுக்க
நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (11.09.2026) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாமலால் மகிந்தவின் இடத்தை அடைய முடியாது
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச என்பவர் முற்றிலும் ஒரு தனித்துவமான அரசியல் ஆளுமையையும் அடையாளத்தையும் கொண்டவராவார். எனவே, வெறும் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஆளுமையையோ அல்லது அவருக்குரிய இடத்தையோ நாமல் ராஜபக்சவினால் அடைந்துவிட முடியாது.
அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.

ஆட்சி அதிகாரம்
எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர்.
அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.
எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.