வீழ்த்தப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாகவே கட்டியெழுப்ப முடியும்:நிமால் சிறிபால டி சில்வா
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தேர்தல் ஒன்றின் மூலம் மீளக் கட்டியெழுப்ப முடியாது என விமான போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் ஸ்திரத்தன்மை கொண்ட அரசாங்கம் எனவும் ஜே.வி.பி மற்றும் சஜித் மூலம் நாட்டிற்கு டொலர் கொண்டுவர முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டிள்ளார்.
திருகோணமலை இயற்கை துறைமுகத்தை பார்வையிட நேற்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
துறைமுகமாக அபிவிருத்தி திட்டங்கள்
இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை உலகின் தலைசிறந்த வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக இலாபமீட்டாமல் இருந்த திருகோணமலைத் துறைமுகம் கடந்த 6 மாதங்களில் சற்று இலாபம் தரக்கூடிய துறைமுகமாக மாற்றப்பட்டுள்ளது.
திருகோணமலைத் துறைமுகத்தை மேலும் விஸ்தரிப்பதற்கும் திருகோணமலை துறைமுகத்தை அண்டிய ஆள் கடலை அண்டிய கரையோரத்தில் புதிய ஒரு துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்பிலும், ஆராய்வதற்காக இன்றையதினம் திருகோணமலை துறைமுகத்தை பார்வையிடுவதற்கும், அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பிரசாந்த ஜெயம்மான அவர்களின் தலைமையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடிக்கு தேர்தலில் தீர்வு கிட்டாது
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமையியே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேர்தல் ஒன்றுக்கு தயாராக உள்ளீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை பொருளாதார நெருக்கடிக்கு தேர்தல் ஒன்றின் மூலம் தீர்வு கிட்டாது எனவும் பதிலளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு
நாளை பிரதமர் மாற்றப்படுவதாலும் அரசாங்கம் மாற்றப்படுவதாலும் நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அதனால் நாட்டில் டொலர் வந்து கொட்ட போவதில்லை.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியினராலும் டொலர் கொண்டுவர முடியாது. சஜித் மூலமும் டொலர் கொண்டு வர முடியாது. அவ்வாறு அவர்கள் மூலம் டொலர் கொண்டு வர முடியும் என்றால் அவர்கள் இந்த அரசாங்கத்தை பாரமெடுத்து முன்னெடுத்திருக்க முடியும்.
எனவே வீழ்த்தப்பட்ட நாட்டின் பொருளாதாரம் படிப்படியாகவே கட்டியெழுப்ப
முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.