ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி: பொலிஸார் மறுப்பு
நாடளாவிய ரீதியில் இன்று(15) மாலை ஐந்து மணிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியினை பொலிஸார் மறுத்துள்ளனர்.
குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று மாலை ஐந்து மணியுடன் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இதுதொடர்பில் விளக்கமளிக்கும் போதே குறித்த செய்தியினை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ மறுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா
ஊரடங்கு உத்தரவானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே அதுதொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு விடயத்தில் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது என நிச்சயமாக கூற முடியாது என தெரிவித்த அவர், பிறப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவினை நடைமுறைப்படுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



