கொவிட் வைரஸின் புதிய வகைகள் நாட்டிற்கு உள்ளேயே உருவாகலாம்! ஹரித அலுத்கே
கொவிட் வைரஸின் புதிய வகைகள் நாட்டிற்கு உள்ளேயே உருவாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸின் 20 புதிய வகைகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமைகளின் போது இவ்வாறு வைரஸ் திரிபடைந்து புதிய வகைகள் உருவாவது சாதாரண நிலைமை என உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த சவாலிலிருந்து முற்று முழுதாக இலங்கை விடுபடுவதற்கு சாத்தியங்கள் வரையறுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இந்த புதிய வகை வைரஸ் தொற்று நாட்டிற்குள் காவப்படாவிட்டாலும் உள்நாட்டிலேயே இவ்வாறான வைரஸ் தொற்று உருவாகக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.