புதிய தேசிய ஊடகக் கொள்கை வரைவு அமைச்சரிடம் நேரடியாகக் கையளிப்பு!
நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின் மேம்படுத்தப்பட்ட வரைவானது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது நேற்று(14.3.2026) வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுயாதீன பல்தரப்புப் பங்குதாரர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கையானது, 2023 மே மாதம் முதல் 2025 டிசம்பர் வரையான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான பல்வகைப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையில் பல துறைகளுக்கு கொள்கை ரீதியான தேவை இருப்பதை மக்கள் போராட்டமானது (அரகலய) சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அதற்கான கொள்கைகளை உருவாக்கும் பணிகள் தற்போது அமைச்சு மட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஊடகக் கொள்கையானது வெறுமனே அமைச்சின் கொள்கை மட்டுமல்ல எனவும், அமைச்சு இந்த பணிக்கான வசதிகளை மட்டுமே செய்து கொடுத்தது எனவும் அமைச்சர் கூறினார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இவ்வாறானதொரு கொள்கையை சுயாதீன பல்தரப்புப் பங்குதாரர் குழுவொன்று தயாரிப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மை மற்றும் குடிமக்களின் தாக்கம் குறித்தும் வெகுஜன ஊடக அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய ஊடகக் கொள்கை வரைவு
இதன் ஆரம்ப வரைவானது, 2023 ஆம் ஆண்டில் வெகுஜன ஊடக அமைச்சால் நியமிக்கப்பட்ட 23 உறுப்பினர்களைக் கொண்ட ஆரம்ப வரைவுக் குழுவின் மூலம் 2024 ஜூலை மாதத்தில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போதைய அரசால் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் நியமிக்கப்பட்ட 28 உறுப்பினர்களைக் கொண்ட பல்தரப்புப் பங்குதாரர் குழுவினால் இந்த மேம்படுத்தப்பட் வரைபைத் தயாரிக்கும் செயல்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
அதன்படி பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக, 2025 ஜூன் மாதம் முதல் அமைச்சின் இணையதளத்தில் ஆரம்ப வரைவை மும்மொழிகளிலும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், வெகுஜன ஊடக அமைச்சு, தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கொழும்பு, கண்டி, புத்தளம், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் செயற்பாட்டாளர்களின் கருத்துகளைப் பெற்று இந்த பணிக்கான மக்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஸ பண்டார, வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி - வெகுஜன ஊடகம்) நெலும் தில்ஸாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் தேசிய ஊடகக் கொள்கையை வரைந்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.