ராஜபக்சர்களின் சூழ்ச்சியில் அமைந்தது தான் புதிய அரசாங்கம்: அநுர குற்றச்சாட்டு
"ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியிலிருந்து ராஜபக்சர்களை தவிர, வேறு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அக்கட்சியில் இருந்து எவராவது ஜனாதிபதியானால் அக்கட்சியின் தலைமைத்துவத்தை ராஜபக்சக்கள் இழக்க நேரிடும். எதிர்கால ராஜபக்சக்களுக்காக கட்சியை பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனால் தான் மொட்டுக் கட்சி அல்லாத ஒருவரை ஜனாதிபதியாக்க நடவடிக்கை எடுத்துள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழ்ச்சி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு பிரதமர் பதவிக்கும் வரமுடியாது. அவ்வாறு வந்தாலும் அவர் மொட்டுக் கட்சி தலைவராகிவிடுவார். அதனால்தான் மஹஜன எக்சத் பெரமுன கட்சி தலைவரான தினேஷ் குணவர்தன பிரதமராக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்சர்களுக்கு எதிரான அரசியல்
சஜித்தை ஜனாதிபதியாக்கினால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, ராஜபக்சக்களுக்கு எதிராக அவர் அரசியல் முகாமொன்றை கட்டியெழுப்பிவிடுவார். ரணிலால் அது முடியாது. அவ்வாறு செய்யவும் மாட்டார்.
எனவே, ரணிலை ராஜபக்சர்கள் தெரிவுசெய்வதற்கு இதுவும் ஒரு காரணம். அதேபோல் ஊழல் மோசடிகளில் இருந்து தம்மைக் காக்கும் சிறந்த காவலன் ரணில் என ராஜபக்கச்கள் கருதுகின்றனர்" என கூறியுள்ளார்.