சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்காத வகையில் எல்லை நிர்ணயம் இடம்பெற வேண்டும் - தேசிய அமைப்பாளர் மகேந்திரன்
மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். அதேபோல சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்காத வகையில் எல்லை நிர்ணயம் இடம்பெறவேண்டும். அதனை மையப்படுத்திய பொதுவானதொரு கலந்துரையாடலுக்கு எமது கட்சி தயார் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.
நுவரெலியா, இராகலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கொழும்பு துறைமுக நகரம், மாகாணசபைத் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இவை தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு ஆரம்பம் முதலே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். இத்திட்டமானது இந்நாட்டின் இறைமைக்கும், அரசியல் இருப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மறுபுறத்தில் நாட்டின் கடல் வளத்துக்கும், சுற்றாடலுக்கும் ஆபத்தாகமே அமையும். இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பிரதமரால் புதிய சட்டமூலமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஆணைக்குழுவொன்றின் ஊடாகவே அப்பகுதி நிர்வகிக்கப்படும். இதன்மூலம் சீனாவின் தேவை நிறைவேற்றப்படும். எனவே, இச்சட்ட மூலத்தை அரசு மீளப்பெற வேண்டும். துறைமுக நகர்ப்பகுதியை நாட்டு எல்லைக்குள் உள்வாங்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச ஓர் அரசியல் தீர்வாக மாகாணசபை முறைமை காணப்படுகின்றது. அதற்கும் பேரினவாதிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். எனவே, தேர்தல் பிற்போடப்படுவது கண்டிக்கதக்கதொன்றாகும்.
ஆகவே, ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டுமானால் உடனடியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயம் என்பது கடந்த காலங்களில் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த உள்ளாட்சி சபைத் தேர்தலின்போதும் அவ்வாறே நடைபெற்றது. சிறுபான்மையின் கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதே இதன் நோக்கம். எனவே, சிறுபான்மையினத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதனை மையப்படுத்திய பொதுக்கருத்தடாலுக்கு நாம் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.