இலங்கைக்கான புதிய மூன்று தூதுவர்கள் நியமனம் : இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அநுர அழைப்பு
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நாடுகளின் தூதுவர்கள், தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர்.
இந்த நிகழ்வு நேற்று(24.02.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்படி கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, கட்டார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, ஸ்லோவேனியா குடியரசின் புதிய தூதுவராக Tomaž Mencin ஆகியோர் தங்களின் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
இலங்கையுடனான இருதரப்பு உறவு
நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய தூதுவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், பரஸ்பர ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாசார பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
