ஹோர்முஸுக்கு அருகில் மாபெரும் குண்டுகளால் தாக்குதல்.. பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுங்கு குழிகளை ஊடுருவும் திறன் கொண்ட சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு ஹோர்முஸ் ஜலசந்தி நெடுகிலும் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் எக்ஸ் தள பதிவில், ஜலசந்தியின் ஈரானிய கடற்கரையோரம் உள்ள "பலப்படுத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது, 5,000 பவுண்டு எடை கொண்ட பல ஆழ்துளை ஊடுருவும் வெடிமருந்துகளை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளன" என்று கூறியுள்ளது.
முக்கிய பாதை
"இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய கப்பல் எதிர்ப்பு குரூஸ் ஏவுகணைகள், ஜலசந்தியில் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன" என்று அமெரிக்க இராணுவம் கூறுகிறது.

உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20 வீதம் செல்லும் இந்த நீர்வழியை ஈரான் திறம்பட மூடியமை கடல்வழிப் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்வதற்கும் பங்களித்துள்ளது.
பங்கர் பஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் குண்டுகள், ஒவ்வொன்றும் சுமார் 288,000 டொலர்கள் செலவாகும் எனக் கூறப்படுகிறது.
பங்கர் பஸ்டர்ஸ் குண்டுகள்
கடந்த ஆண்டு ஈரானில் உள்ள மூன்று நிலத்தடி அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது பயன்படுத்திய 30,000 பவுண்டு (13,600 கிலோ) குண்டுகளை விட இவை சக்தி குறைந்தவை.

வழக்கமான குண்டுகளைப் போலல்லாமல், பங்கர் பஸ்டர்ஸ் காற்றில், தரையில் அல்லது இலக்கின் மேற்பரப்பில் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
அவை கனமான, கடினமாக்கப்பட்ட எஃகால் மூடப்பட்டு, வெடிப்பதற்கு முன் நிலத்தின் ஆழம் வரை ஊடுருவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.